Thursday, 8 October 2020

 பாவம், புண்யம், ப்ரத்யவாய, பாதகம், அதிபாதகம், மஹாபாதகம் என்பதன் விளக்கம்: 

---------------------------------------------------------------------------------------------------------------------------

"புண்ணியம்" என்றால் என்ன? புண்ணியம் என்றால் ஒருவருடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றுக்கும் நன்மை உண்டாக்கக் கூடிய செயலே புண்ணியம் எனப்படுகிறது. ஒருவருடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றுக்கும் தீமை விளைவிக்கக் கூடிய செயல் "பாவம்" என்று அழைக்கப்படுகிறது. புண்யம் மற்றும் பாவம் ஆகிய இரண்டுமே இரண்டு வகைப்படும். 

பாவத்தின் இரண்டு வகையில், ஒன்று பாதகம் மற்றொன்று ப்ரத்யவாய. செய்யக் கூடாத காரியத்தை ஒருவர் செய்தால், உதாரணமாக திருடுதல், பொய் பேசுதல் போன்றவற்றை செய்தால் அது பாதகம் எனப்படுகிறது. அதாவது மற்றவர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயல் பாதகம் எனப்படுகிறது. ஒருவர் செய்ய வேண்டியதை செய்யத் தவறிவிட்டால், உதாரணமாக வரியவருக்கு உணவளிக்க தவறுவது அல்லது நோயுற்றோருக்கு சேவை செய்யாமல் இருப்பது போன்றவை " ப்ரத்யவாய " எனப்படுகிறது. உளவியலாரின் கருத்துப்படி இந்த ப்ரத்யவாய என்பது பாதகத்தைவிட கண்டனத்திற்குரியது.

பாதகம் என்பது மீண்டும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. உங்களுடைய செயல் மற்றவருக்கு பாதிப்பை உண்டாக்கிவிட்டதாக வைத்துக்கொள்வோம். சந்தேகமின்றி அது பாதகம்தான். ஆனாலும் அதனால் உண்டான  இழப்புக்கு ஈடாக பரிகாரத்தை பாதிக்கப்பட்டவருக்கு செய்துவிட்டால் அந்த செயல் பாதகம்   என்பதில் இருந்து  விடுபட்டுவிடுகிறது.  உதாரணமாக நீங்கள் எதையாவது திருடிவிடுகிறீர்கள். அதை அதற்குச் சொந்தமானவரிடமே சிறிது வட்டியோடு திருப்பித் தந்துவிட்டால்  அதற்கு மேலும் அதை பாதகம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதற்குரிய இழப்பை நீங்கள் சரிசெய்துவிடுகிறீர்கள். ஆனால் சில இழப்புகளை உங்களால் ஈடு செய்யவே முடியாது. உதாரணமாக, நீங்கள் ஒருவருடைய விரலை துண்டித்து விடுகிறீர்கள், அதை உங்களால் திருப்பி பொருத்த முடியாது. அத்தகைய செயல் "அதிபாதகம்" என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் ஈடே செய்யமுடியாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய காரியத்தை நீங்கள் செய்துவிட்டால், அதேசமயம் அது மற்றவர்களிடம் தீய பாதிப்புகளை உண்டாக்கக் கூடியதாகவும் இருக்குமேயானால் அத்தகைய செயல் "மஹாபாதகம்" என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, ஒரு நேர்மையற்ற வியாபாரி கருமிளகோடு பப்பாளி விதைகளை கலப்படம் செய்கிறான். இரண்டு விதைகளும் ஒரேமாதிரி உள்ளதால் ஒருவராலும் இந்த இரண்டு விதைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. இதைப்பார்த்து மற்ற வியாபாரிகளும் இந்த உதாரணத்தை பின்பற்றும்படி தூண்டப்படலாம். இப்படியே இந்தக் கலப்பட சுழற்சியானது தொடர்ந்துகொண்டே இருக்கும். இதுவே "மஹாபாதகம்" எனப்படுவது. ஒருவர் புண்ணிய காரியங்களுக்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்பணித்துக்கொள்வதன் மூலம் அதிபாதகத்திற்கு பிராயசித்தம் பெறலாம். இழப்பிற்கு ஈடு செய்வதன் மூலம் பாதகத்திற்கு பரிகாரம் செய்யலாம். ஆனால் மஹாபாதகத்திற்கு ஒருபோதும் பரிகாரமே கிடையாது. இது பாதகங்களிலேயே மிகவும் மோசமானது. இதற்காக ஒருவர் தன்னுடைய உயிரையே புனித காரியத்திற்காக அர்ப்பணம் செய்யவேண்டும். எந்தஒரு சுகத்தையும் தேடுதல் கூடாது. இராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இராமனோடு நடந்த யுத்தத்தில் இராவணன் தோற்கப் போகும் தருவாயில், அவனுடைய இறைவனாகிய, அவனுடைய ஆற்றலின் மூலப்பொருளாகிய   ஷிவபெருமானிடம்  வேண்டினான். ஆனால்  அவன் மற்றொருவருடைய மனைவியை அபகரித்ததன் விளைவாக ஷிவபொருமான் மிகவும் மனம் கசப்புற்று இருந்ததால் அவனுக்கு உதவ விரும்பவில்லை. இராவணனைக் காப்பாற்ற வேறு எவருமே இல்லை. இராவணன் வேறு ஒரு குருவின் சீடனாக இருந்திருந்தால் அவனுடைய உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் ஷிவபெருமானே அவனுடைய குருவாய் இருந்ததால் அவன் உயிரைக் காப்பாற்ற வேறு யாருமே இல்லை. வேதங்களில், " ஷிவே ருஸ்டே குருஸ்ராட்டா குரவோருஸ்டே நாகஷ்சன" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஷிவன் ஒரு மனிதனிடம் கோபப்பட்டால் அந்த மனிதனுடைய குரு அவனை காப்பாற்றலாம். ஆனால் ஷிவனே குருவாய் இருந்தால் பிறகு அவனை யாராலும் காப்பாற்ற முடியாது . இவ்வாறு ஷிவனே இராவணனுடைய குருவாய்  இருந்ததால் ஷிவனுக்கு இராவணன்மீது கோபம் வந்தபோது இராவணனைக் காப்பாற்றுவதற்கு  யாருமே இல்லை.

ஷிவபெருமானிடம் அவருடைய மனைவியாகிய பார்வதி கேட்கிறாள், "இராவணன் உங்களுடைய பக்தனாயிற்றே, அவனை தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்று. ஆனால் ஷிவனால் எப்படி அவனை காப்பாற்ற முடியும்? இராவணன் ஒரு மஹாபாதகன். பார்வதி கூறினாள், "இராவணன் ஒரு அதிபாதகன்தானே" என்று ஆலோசனை கூறினாள். அதற்கு ஷிவபெருமான், "இல்லை, இராவணன் சீதையை ஒரு திருடனாய் வந்து அபகரித்திருந்தால் அவனை ஒரு அதிபாதகன் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவன் ஒரு துறவியின் வேடத்தில் வந்து அபகரித்துவிட்டான்" என்றார். இது இச்சமுதாயத்தில் ஒரு தொடர் விளைவை உண்டாக்கிவிடும். எதிர்காலத்தில் எந்த ஒரு திருமணமான பெண்ணும் ஒருபோதும் இனிமேல் ஒரு துறவியை நம்பமாட்டாள். அவர்கள் ஒரு துறவியைப் பார்த்தால் மாறுவேடத்தில் மற்றொரு இராவணன் இருப்பதாகவே நினைப்பார்கள். அயோக்கியர்களும் துறவிகளின் ஆடையணிந்து இத்தகைய குற்றங்களை செய்வார்கள். உண்மையில் இன்றைக்கும் அவர்கள் இதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய குற்றங்கள் காலமெல்லாம் தீய விளைவுகளை உண்டாக்கக்கூடியவை என்பதால் சந்தேகமில்லாமல் இது மஹாபாதகம்தான்| என்று கூறி இராவணனுடைய உயிரைக் காப்பாற்ற மறுத்துவிட்டார் ஷிவபெருமான். பார்வதி அப்போது, "அப்படியென்றால் நான் அவன் உயிரைக் காப்பாற்றுகிறேன்" என்றாள். " சரி நீ வேண்டுமானால் முயற்சி செய் ஆனால் நீ வெற்றியடையமாட்டாய்" என்றார் ஷிவபெருமான். பார்வதியும் அவ்வாறே இராவணனை காப்பாற்ற முயற்சி செய்து தோற்றுப்போனாள். 

பாவத்தில் இரண்டுவகை இருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஒன்று பாதகம் மற்றொன்று ப்ரத்யவாய. அதேபோல புண்யத்திலும் இரண்டுவகை உண்டு. ஒன்று ப்ரத்யக்ஸ புண்யம் மற்றொன்று அப்ரத்யக்ஸ புண்யம் - அதாவது நேரடியான புண்யம் மற்றொன்று மறைமுகமான புண்யம். பசியால் வாடுகின்றவர்களுக்கு உணவளிப்பதாலும், படுத்தபடுக்கையாய் கிடக்கின்ற நோயாளிகளுக்கு சேவை செய்வதாலும் ப்ரத்யக்ஸ அல்லது நேரடியான புண்;யம் ஒருவருக்கு கிடைக்கிறது. ஒருவர் செய்த சேவை தொடர் விளைவுகளை உண்டாக்கக்கூடிய தன்மையைப் பெற்றிருந்தால் மறைமுக புண்யத்தை அவர் பெறுகிறார். உதாரணம்: சமுதாயத்திற்கு தொண்டு, மரம் நடுதல் போன்றவை. வெய்யில் மற்றும் தூசி நிறைந்த பாதைகளில் ஆலமரங்களை நட்டுவைத்தால் அவை ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, களைத்து வருகின்ற பயணிகளுக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருக்கும். இதுபோன்ற காரியங்களில் வருவது மறைமுக புண்யம். பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும் உடலால் நலிந்தவர்களும் நேரடி புண்யத்தை பெறுவது கடினம். காரணம், அவர்களுடைய சாதகமற்ற சமுதாய சூழ்நிலைதான். இந்த நேரடி புண்யத்தை மிகச் சிலர்தான் பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.  ஆனால் மறைமுக புண்யத்தை எல்லோராலும் பெற முடியும். முயற்சி செய்தால் நேரடி புண்;யத்தையும் எல்லோரும் பெற முடியும் என்பதும் உண்மைதான். பண வசதி இல்லாதவர்கள் உடலால் சேவை செய்யலாம், உடலால் வலிமையற்றவர்கள் அறிவுசார்ந்த சேவையை செய்யலாம். ஏதேனும் ஒரு வழியில் ஒவ்வொருவராலும் சேவை செய்ய முடியும். இதுதான் புண்யத்தைப் பற்றியும் பாவத்தைப் பற்றியும் உள்ள விளக்கங்கள். 


🌸ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌸


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து

No comments:

Post a Comment