Wednesday, 7 October 2020

 *தர்மத்தின் பாதையில் செல்லும்போது ஒருவர் நற்காரியங்களை செய்தால் மட்டும் போதாது, ஒருவர் நேர்மையற்ற மனிதர்களுக்கு எதிராக போராடவும் செய்ய வேண்டும்*

-----------------------------------------------------------------------------------------------------------------------

 “த்யஜா துர்ஜனசம்சர்கம் பஜ சாது சமாகமம் குருபுண்யமஹோராத்ரம்ஸ்மரநித்யமநித்யதாம் ”    

தீயவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். நீங்கள் கேட்கலாம் "தீயவர்கள் எப்போதாவது நல்லவர்களாக மாறமுடியுமா?" என்று. நிச்சயமாக அவர்களால் முடியும். ஆனால் அவர்களைவிட மிகுந்த மனோபலம் மிக்கவர்கள் மட்டுமே அவர்களை மாற்ற முயல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தனி ஒருவராக செல்வதற்கு பதிலாக "ஐந்து அல்லது பத்து நண்பர்களை உங்களோடு அழைத்துக்கொண்டு போகவேண்டும். அதன்மூலம் உங்களுடைய கூட்டு மனோபலமானது அவர்களைக் காட்டிலும் பெரியதாய் இருக்கும்". " த்யஜா துர்ஜன ஸம்ஸர்கம்". ஏழைகளின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று மிகவும் உற்சாகத்தோடு பலர் பேசுவார்கள், ஆனால் உண்மையில் அதைச் செய்யக்கூடிய நோக்கம் அவர்களிடத்தில் இருக்காது. அவர்கள் பித்தலாட்டக்காரர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும் நீங்கள் அவர்களிடம் நேரடியாக மோதக்கூடாது,  மாறாக தற்காலிகமாக அவர்களிடம் கருத்து வேறுபாடு இல்லாததுபோல் காட்டிக் கொள்ள வேண்டும். இத்தகைய மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? தனியாக அவர்களைக் கையாளுவதற்கு பதிலாக பத்து அல்லது இருபது நபர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களை நல்வழிக்கு கொண்டுவர வேண்டும். 

 "பஜ ஸாது ஸமாகமம்" ஸாது என்பவர் யார்? எவருடைய நட்பு ஹிதத்திற்கு அதாவது உடல், மனம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றின் நலனுக்கு வழிகாட்டுகிறதோ அவரே ஸாது என்பவர். பிறவியிலிருந்தே நேர்மையான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர் யாரோ அவரே ஸாது என்று அழைக்கப்படுகின்ற தகுதியைப் பெற்றவர். மற்றவர்கள் மனிதர்களைப் போன்று தோன்றினாலும், அவர்களை "கழுதைகள்"! என்று அழைப்பதே மிகப்பொருத்தமாகும். அவர்கள்  மனிதத் தோற்றத்தை பெற்றிருக்கிறார்கள், அவர்கள் மனிதத் தாயிடம் இருந்துதான் பிறந்திருக்கிறார்கள். - ஆனால் ஒரு கழுதையின் மனப்பாங்குடன் பிறந்திருக்கிறார்கள்.

 'பஜ ஸாது ஸமாகமம்'. 

 பிறருடைய நலனுக்காக அர்பணித்துக்கொண்ட நேர்மையான மனிதர்களோடு எவ்வளவு நேரம் செலவிட முடியுமோ அவ்வளவு நேரத்தை செலவளியுங்கள். இது உங்களுடைய தனிப்பட்ட நலனில் முன்னேற்றத்தை அடையவும், மற்ற எல்லா உயிர்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கும் வழிவகுக்கும். இதுவே ஒரு சிறந்த மனிதனுடைய கடமையாகும். பாவகாரியங்கள் செய்கின்ற மனிதர்களின் தொடர்பை தவிர்த்துவிடுங்கள். 

பாவம் செய்கின்ற மனிதர்கள் எல்லோரும் எல்லோருக்கும் சமமான தீயவர்கள் அல்ல. ஆனால் நேர்மையான மனிதர்கள் யாவரும் எல்லோருக்கும் சமமான நல்லவர்களே. இது சம்பந்தமாக சொல்லப்பட்டிருப்பதாவது:


“ஸத்சங்கேன பவேன்முக்திர் அஸத்சங்கேஸுபந்தனம் அஸத்சங்கேன முத்ரணம் ஜத் தன்முத்ரா பரிகீர்த்தித”.

                    

சத்சங்கத்தின் சிறப்பு என்னவென்றால், அதாவது நல்லோர்களின் நட்பின் உயர்வு என்னவென்றால், அது எல்லோருக்கும் சமமான பயன்தரக்கூடியது.

"குரு புன்யம் அஹோராத்ரம்". அஹோராத்ரம் என்றால் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உள்ள இருபத்துநான்கு மணி நேரத்தைக் குறிக்கும். 

ஒருவன் இருபத்துநான்கு மணிநேரமும் புன்னியத்தை பெறவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே கேள்வி என்னவென்றால், புன்னியம் என்பது என்ன?    கங்கை ஆற்றில் ஒருமுறை முழுகி எழுந்துவிட்டால் ஒருவர் புன்னியத்தை பெற்றுவிடுவாரா? என்பதுதான். 


 பிறருக்கு நன்மை செய்வதே புன்னியம் என்பது. பிறருக்கு தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதற்கும் கொடுமைகள் செய்வதற்கும் ஆவல் கொண்டுள்ள மனிதர்களுக்கு பஞ்சமே இல்லை. புன்னியம் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கும்  சமுதாயத்திற்கும்  நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் நன்மை செய்வதன் மூலம் அவர்கள் புன்னியத்தை பெறவேண்டும். அவர்களுடைய செயல்கள் யாவும் மக்களுடைய சமூக-பொருளாதார நலன்களை மிகத் திறமையான முறையில் மேன்மைபடுத்துமாறு இருக்க வேண்டும். இதுவே அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்களுடைய நற்காரியங்கள் இச்சமுதாயத்தை இரண்டு அடி முன்னோக்கி எடுத்துச் செல்லும். ஆனால் உங்களேடு தீயவர்களும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் இச்சமுதாயத்தை இரண்டு அடி பின்னால் எடுத்துச் செல்வார்கள். பிறகு அங்கே முன்னேற்றம் என்பது பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஆகையால் நீங்கள் தொடர்ந்து இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்துகொண்டே இருக்க வேண்டும், அதே சமயம் இச்சமுதாயத்தை பின்னால் எடுத்துச் செல்லுகின்ற தீயவர்கள் ஒரு அடிகூட எடுத்துவைக்காதவாறு அவர்களுக்கு எதிராக போராடவும் வேண்டும். தர்மத்தின் பாதையில் செல்லும்போது ஒருவர் நற்காரியங்களை செய்தால் மட்டும் போதாது, ஒருவர் நேர்மையற்ற மனிதர்களுக்கு எதிராக போராடவும் செய்ய வேண்டும். இரண்டுமே புண்ணிய காரியங்கள்தான் .


 இச்சமுதாயத்தில் நிறைய நல்ல மனிதர்கள் உள்ளனர்.  நற்காரியங்களில் ஈடுபட்டுள்ள நல்லோர்கள் தீமைகளுக்கும் அநீதிக்கும் எதிராக போராட தயாராக இருப்பதில்லை. இவ்வுலகில் இத்தகைய  நற்காரியங்கள் உண்மையில் மனிதசமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான வழிகளை மேன்மையுறச் செய்யாது. இங்கே தேவைபடுவது என்னவென்றால் நற்காரியங்களை செய்வதன்மூலம் புன்னியத்தை பெறவேண்டும் அதே சமயம் குற்றங்களுக்கும் பாவங்களுக்கும் எதிராக போராடவும் வேண்டும். இரண்டுமே கட்டாய கடமையாகும். இரண்டுமே தர்மத்தின் பிரிக்கமுடியாத பகுதிகளாகும்.


🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷


(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)

No comments:

Post a Comment